Saturday, June 27, 2009

Beyond Sixth Sense

பொதுவா இப்பவும் எல்லோருக்கும் புரிபடாத, நம்புறதா வேணாமான்னு இருக்கிற ஒரு விசயம் என்னன்னா இறந்து போனப்புறம் நாம என்னாவோம்கிறதும், ஆத்மாக்கள், ஆவிகள் பத்தியும் தான்.


இந்த 21ம் நூற்றாண்டில கம்ப்யுட்டர் காலத்தில் பேயாவது, பூதமாவது தான்னு பெரும்பாலனவங்க நினைக்கிறாங்க. விஞ்ஞானத்தால நிருபிக்கப்படாத எதுவும் நம்புவதற்க்கில்லை என்கிற மனோபாவம்தான் இன்னைக்கு பெரும்பாலனவங்ககிட்ட இருக்கிற ஒன்னு. குறிப்பா நகர்ப்புறத்து மக்களுக்கு, படிச்சவங்களுக்கு.

ஆனா கிராமப்புறத்தை பொருத்தவரைக்கும் இது எல்லாமே உண்மை தான்னு நினைக்கிறாங்க. விஞ்ஞானத்தால இறந்த பிறகு உலவும் ஆத்மாக்கள், ஆவிகள் இருக்கிறதை நிருபிக்க முடியலைன்னாலும் விஞ்ஞானம் இன்னைக்கும் ஒத்துக்கிற ஒரு விசயம் என்னன்னா அதனால எதுலயும் ஒரு அளவுக்கு மேல போகமுடியலைங்கிறதுதான். என்ன தான் முயற்சி பண்ணினாலும் ஒரு லெவல் வரைக்கும் தான் போக முடியுது. அதுக்கு மேல சூன்யம் தான்னு ஒத்துக்குது.

அத தான் நாம சக்தி, அந்த பவர், இந்த பவர், சுப்பர் பவர், அல்லா, சிவன்னு சொல்றோம். என்னைப் பொருத்தவரைக்கும் இதுல நம்பிக்கை இருக்கா, இல்லையான்கிறத விட இதெல்லாம் உண்மையான்னு தெரிஞ்சுகிறதுல எனக்கு ஆர்வம் உண்டு.

இதுல மட்டும் இல்லாம ஏவல், பில்லி, சூன்யம்ன்னு சொல்லப்படுற சங்கதிகள், நாம தினசரி கோயிலுக்கு போய் கும்பிடற, மனசுக்குள்ள வேண்டிக்கிற இஷ்ட தெய்வங்கள், ஊர் காவல் தெய்வங்கள், வன, கிராம தேவதைகள், காவல் காக்கிறதா சொல்ற பூத கணங்கள் இப்படி நல்ல சக்திகள்னு நினைக்கிற விசயங்களிலும் உண்டு.


எனக்கும், என்னைச் சார்ந்த சிலருக்கும் நம்ப முடியாத, எப்படினு தெரியாத, அமானுஷ்ய விசயங்களை அனுபவபூர்வமா உணர்ந்த, சில சப்தங்கள் கேட்ட சம்பவங்கள் நிறைய இருக்கு. 

எதாவது பிரச்சனைகள்ள சம்பந்தமே இல்லாம ஒரு சில பேரால நான் பாதிக்கப்பட்டு பயந்து போய் மனசொடுஞ்சு நின்னுருக்கேன். அப்பெல்லாம் எனக்கு துணையா நான் நம்பிக்கை வச்சுருக்கிற சில தெய்வங்களை நினைத்துக் கொள்வதோ, வேண்டிக் கொள்வதோ தான்.  Ripley's believe it or not மாதிரி சொன்னா யாரும் நம்ப மாட்டார்கள். சில நாள்களிலேயே என்னை பயப்பட வைத்தவர்கள் எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகி போறதையோ, கை...கால் அடிபட்டு மாசக்கணக்கில் படுக்கையில் கிடப்பதை என் கண் முன்னாலேயே பார்த்திருக்கிறேன். பல சமயங்களில் எனக்கு ஒரு கவசம் போல சில சக்திகள் பாதுகாப்பாய் இருப்பதை உணர முடிந்தது. சில காரணங்களால் மனம் சஞ்சலப்படும்போதும், மன அழுத்தம் ஏற்பட்டு இடமாற்றம் சாத்தியமே இல்லாத சில இடங்களை விட்டு நான் தூர விலகி போக நினைக்கும் போதும் அதிசயமாக அந்த இடத்தை விட்டு ஒரு சில நாட்களிலேயே நான் வேறு இடத்திற்க்கு அப்புறப்படுத்தப்படுகிறேன். காந்தம் போல சில சக்திகள் என்னுடனே என்னை சுற்றி வருகிறது என்பதை சில நேரங்களில் தெரிந்து கொள்கிறேன்.

ஆனா இந்த பதிவுல அந்த அனுபவங்களை சொல்லல. அதைப் பத்தி விரிவா வேறொரு பதிவில் சொல்றேன்.

இந்த பதிவு எதுக்குன்னா ஆவிகளோட பேசும் மனிதர்களைப் பற்றி, அவங்க உடம்புல இருக்குற சில விசித்திர மாற்றங்களை பத்தி. பொதுவா ஆவிகள் நாய்கள் கண்ணுக்குத் தெரியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. எந்த அளவு உண்மைய்னு தெரியல. விஞ்ஞானம் அது பொய்னு சொன்னாலும் பலரிடம் இந்த நம்பிக்கை இருக்கு.

ஆறறிவு படைத்த மனிதனை விட அறிவில் குறைந்த நாய்கள், பூனைகள், குதிரைகள் கண்ணுக்கு மட்டும் எப்படி தெரியும்னு தெரியல. உலகெங்கும் உள்ள ஆவி உலக ஆராய்ச்சியாளர்கள் சொல்வது சில விலங்குகளுக்கு ஆவிகளின் நடமாட்டம் நன்கு தெரியுமென்பதே. ஆனால் அந்த நேரங்களில் இவ்விலங்குகள் நிலைகொள்ளாமல் தவிக்கின்றன. கிறீச்சிடுகின்றன, பதுங்குகின்றன. அந்த நடமாட்டம் அவைகளை பாதிக்கிறது. அருகில் ஆவிகள் நடமாடுவது அவற்றுக்குப் புரிகிறது.

இன்னொரு பொதுவான தகவல் ஆவிகள் நடமாடும் இடத்தின் டெம்பரேச்சர். இயல்பு நிலையிலிருக்கும் டெம்பரேச்சர் ஆவிகள் வருகையின்போது மட்டும் சரேலேன குறைந்து அந்த இடம் ஜில்லிட்டு போவது. அது வீடு, அறை அல்லது வெளியே எங்கிருந்தாலும். ஆவிகள் அந்த இடத்தை விட்டு சென்றவுடன் மறுபடியும் சிதொஷ்ண நிலை இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது.

சில விடுகள் முன்னாடி நாய்கள் ஊளையிடும். அப்போ அதை விரட்டுவாங்க. காரணம் அந்த பகுதியில எதாவது சாவு விழுந்துடுமோன்னு ஒரு பயம்.

அந்த பகுதியில இருக்கிற, ஏதாவது ஒரு வீட்ல இருந்து மனித உயிர் போகப்போகுதுன்னா அந்த ஆத்மாவ ஆவி உலகத்துக்கு வரவேற்க சில ஆவிகள் வருமாம். அதைப் பார்க்கிற நாய் ஊளையிடும்னு சொல்வாங்க. நல்ல கதை தான் போங்க.

ஒரு வேளை ஆவிகள் நாய்கள் கண்ணுக்கு தெரியும் அப்படின்னா ஆறறிவு !? படைத்த மனுசனுக்கு ஏன் தெரிய மாட்டேங்குதுனு கேட்கலாம். ஆனா சிலர் சொல்றது என்னன்னா மனிதர்களுக்கும் தெரியும், உணர முடியும் ஆனா எல்லாருக்கும் அல்ல நு அப்படிங்கிறதுதான்.

அந்த சில பேருக்கு மட்டும் எப்படி அப்படின்னா...இதோ இதனாலதான்னு ஒரு புத்தகம் சொல்லுது.

"என்டோபிளாசம் அதிகம் சுரக்கும் திரேகங்கள் மனிதர்களில் உண்டு. அனேகமாக இவர்கள் அமாவாசைக்கு முதல் நாளில் ஜனித்திருப்பார்கள். அன்னையின் கருப்பையில் இவர்கள் தாய் தந்தையர் அண்டகோச அடிச்சுவட்டில்தான் உருத்திரள்வார்கள். ஆயினும் பிரபஞ்ச வெளியின் ஒளியும் இருளுமான கால கட்டங்கள், நட்சத்திரக் கதிரொளிகள், திதி கால விசேடாம்சங்கள் கருவின் உயிர்ப்பந்தான உடலைத் தாக்கி உயிரணுக்களை இயக்கி ஆசைகளை மூட்டும்.

அவ்வேளையில் தான் உடலின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் கரு வளர்ச்சியில் தத்தம் வடிவைப் பெற்ற வண்ணமிருக்கும். இதில் கபால பாகம் மட்டும் நெற்றிக்கு மேல் ஓர் அங்குல தொலைவில் ஒரு சுண்டு விரல் உள்நுழையும் அளவான துவாரத்தோடு முழுமை சேராமல் இருக்கும் (இதை நம் ஊரில் உயிர் குழி, உச்சிக் குழி என்று கூறுவர்). அந்த உயிர், அன்னையின் கருப்பையை விட்டு வெளியேறிய பிறகு வெளி உலக இருள், ஒளி, காற்று, அருள் மற்றும் அன்னையின் அமுது (பால்) இவற்றால் தாங்கப்பட்டு மெல்ல வளர்ச்சி கண்டு கபால பாகம் மூடப் பெறும். இதை பொதுவில் இயற்கை என்பார்கள்.

ஆனால் அயிரத்தில் ஒருவருக்கு இந்த கபால பாகம் சரியாக மூடப்பெறாது. கைகளால் தொட்டுப் பார்த்தே தலை பாகத்தில் அது மூடப் படாததை உணரலாம். இத்தகைய கபாலமுடையவர்கள் ஆவிகளோடு எளிதில் பேசும் வல்லமையுடைய மீடியங்களாக முடியும்.

இவர்கள் உடலில் என்டோபிளாச திரவ அளவு கூடுதலாக இருக்கும். இது காற்றில் அலைந்து திரியும் ஆல்ப்பா, பீட்டா, காமா மற்றும் மின் காந்த அலைகளை மிக வேகமாக ஸ்வீகரித்து உணரக்கூடியது. புலன்களுக்கு புலனாகாத விஷயங்கள் இவர்கள் சரீரத்தால் ஈர்க்கப்படும். பயிற்சி பெறப் பெற இவர்கள் சரீரமே ஒரு மின்காந்த சமுத்திரமாக மாறிவிடக்கூடியது. இவர்கள் தியானம் செய்தால், அது மிக இலகுவாக இவர்களுக்கு வசப்படும். மனம் மிகச் சீக்கிரம் ஒருமைப்படும். இருந்தும் இல்லாதவராக இவர்களால் ஆக முடியும். அப்படி ஒருவர் தன்னை மீடியமாக கருதி காற்றுப் புகமுடியாதபடி அல்லது காற்று அவ்வளவாகயில்லாத ஒரு வெற்றிடப் பரப்பை உருவாக்க முடிந்த பாத்திரம் ஒன்றை கவிழ்த்துப் பிடித்து, தன் சிரத்தை அதன் மேல் வைத்து ஒரு தொடர்பினை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். பின் இறந்த வரை எண்ணி தியானித்து அழைக்க இறந்தவர் அந்தப் பாத்திரம் வசம் நுழைந்து தங்கள் அலை போன்ற வடிவிலான சூட்சும தேக சக்தியால் அந்தப் பாத்திரத்தை அசைத்து தங்கள் வருகையை நிருபிப்பார்கள். நமது கேள்விகளுக்கு பதிலை அவர்களால் நமது சிரத்தின் வழியாக புகுந்து எழுதிக் காட்டவும் இயலும்."

மேலே சொன்ன என்டோபிளாசம் சங்கதி எந்தளவுக்கு உண்மைய்னு தெரியாது. காற்றில் அலைந்து திரியும் மின்காந்த அலைகலை சரியாக இனம் கண்டு அதை தன்னுள் இழுத்துக் கொண்டு வந்து தொலைதூரத்தில் இருப்பவர்களோடு உரையாட நமக்கு உதவும் செல்போன் ஒரு சரியான உதாரணம். அதைப் போன்று இதுவும் ஏன் இருக்கக் கூடாதுனு தான் தோணுது.