Monday, April 27, 2009

கலியுக (ஆ)சாமிகள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு பெங்களுர் கால் சென்டரில் வேலை பார்த்த நண்பன் ஒருவன் பார்வர்டு செய்த ஈமெயிலை இந்த ப்ளாக்கில் How safe is Bangalore என்ற தலைப்பில் publish செய்திருந்தேன். அதைப் படித்த ஒருவர் இதை போல தனக்கும் வந்த அந்த ஈமெயிலில் உண்மை இல்லையென்றும், பொதுவாக பீதியை கிளப்புவதற்க்காகவே இதுபோன்ற மெயில்களை சிலர் அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

என்னைப் பொருத்தவரையில் அது உண்மையோ, பொய்யோ தெரியாது...ஆனால் சமீபத்தில் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு எதிரே இருக்கும் ஒரு குடும்பத்தின் கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த அனுபவத்தின் மூலம் மெயிலில் குறிப்பட்டது உண்மையாக கூட இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவன் படித்துக் கொண்டிருப்பது நந்தனம் கலைக்கல்லூரியில். நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் என்ற வரிகளுக்கேற்ப எப்பவும் நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் பழக்கமுள்ளவன்.

சாதரணமாக நடந்து செல்வதே யாரையாவது அடிக்கச் செல்வது போலத்தான் இருக்கும். நடுத்தர உயரம், அதற்கேற்ற நல்ல பலமான உடல்வாகு. தன் அப்பாவின் ஏ டி எம் கார்டைக் கொண்டு பணம் எடுக்க தேவி தியேட்டர் எதிரில் இருக்கும் ஒரு பேங்க் ஏ டி எம் சென்டருக்கு சென்றிருக்கிறான். பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே நடந்து வருகையில் திடிரென்று அருகில் வந்த ஒருவன் சிநேக பாவத்துடன் இவன் தோள் மீது அணைத்தபடி கை போட, திரும்பிப் பார்த்து 'யார் நீங்க' என்று கேட்டு சுதாரிப்பதற்குள் இவனை அப்படியே வாரி இழுத்து அருகில் நின்றிருந்த ஆட்டோவுக்குள் அமுக்கியிருக்கிறான்.

அதற்க்குள் ஆட்டோ வேகமெடுக்க திமிறிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தால் ஆட்டோ ட்ரைவர் அருகில் ஒருவன், பின்னால் இவனை அமுக்கிப் பிடித்துக் கொண்டு இரண்டு பேர். கத்தியை காட்டி மிரட்டி இவன் போட்டிருந்த செயின், மோதிரம், ஏ டி எம் கார்டு, அதிலிருந்து எடுத்த பணம், வாட்ச் என்று சகலத்தையிம் கழட்டி பறித்துக் கொண்ட பின், இவனை அப்படியே விடாமல் பின்னால் இருந்த இரண்டு பேரும் அடி உதைகளால் பின்னியெடுத்திருக்கின்றனர். இவனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பின்னால் விசாரித்த போது கூறினான்.

பல் உடைந்து, மூக்குடைந்து, காதில் இருந்து ரத்தம் வந்த பின்னர் எக்மோர் அருகில் இருக்கும் மேம்பாலத்தில் இவனை உருட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். அங்கிருந்து நடந்தே வீடு வந்து சேர்ந்த அவனை பார்க்கவே பரிதாபமாகத் தான் இருந்தது. முகமேல்லம் வீங்கி, கையில் கட்டுடன் மறுநாள் காட்சியளித்தான்.

ம்ம்ம்...என்ன பண்றது. கலியுகத்துல இப்படியெல்லாம் நடக்காம இருந்தா தான் ஆச்சரியப்படணும் போலிருக்கு.

அழிந்து வரும் சமண சிற்பங்களும், சமணப் படுகைகளும்

சமீப காலங்களில் வரும் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று. புராதான கல் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஒர் இடத்தின் முன் நிற்கும் இளம் ஜோடி கீழே கிடக்கும் எதோ ஒன்றை எடுத்து அந்தச் சிற்பத்தில் தங்கள் இரண்டு பேரின் பெயரையும் எழுதுவதற்க்கு செல்ல எத்தனிக்கையில் திடிரென்று அவர்களை இடைமறிக்கும் நடிகர் ஆமிர்கான் கையிலிருக்கும் பொருளை வாங்கி அந்த ஆணின் முகத்தில் கிறுக்குவார். 'ஏன் இப்படி செய்கிறிர்கள். என் முகம் என்னாவது' என்று எகிற, பதிலுக்கு ஆமிர்கானோ உங்கள் முகத்தை பாதுகாப்பது எப்படியோ அப்படித்தான் இது போன்ற ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட எண்ணற்ற சிற்பங்களையும் கலாச்சார சின்னங்களையும் பாதுகாப்பது' என்று கூறி அதன் முக்கியத்துவம், அவசியத்தை கூறிக் கொண்டு போவார்.
இவ்விளம்பரத்தில் வரும் இளம் ஜோடிகள் போல் தான் இன்றைய பெரும்பான்மையோர் உள்ளனர் நம்மிடத்தில், சில மாநில அரசாங்கங்களையும் சேர்த்து. அப்படி நான் பார்த்த ஒன்று மதுரை மாவட்டம் கீழவளவு கிராமத்தில் இருக்கும் ஒரு மலையில். காரணம் அம்மலையில் இருப்பது பல நூறோ, ஆயிரமோ வருடங்களுக்கு முற்பட்டதான சமண சிற்பங்களும், சமணப் படுகைகளும் தான்.மதுரையிலிருந்து கிழக்காக மேலுரை தாண்டி வலதுபுறம் திரும்பினால் வரும் தஞ்ஜாவூர், புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது இந்த கீழவளவு கிராமம்.
திருப்பரங்குன்றம் மலை போல வெறும் பாறைகளால் ஆனாலும் அளவில் மிகச் சிறியது. மதுரையிலிருந்து சரியாக 47 கீலோ மீட்டர். பள்ளிக் காலங்களில் அந்த கிராமப் பகுதியின் வட்டார நண்பர்களுடன் அந்த மலையில் பலமுறை ஏறிச் சுற்றியிருக்கிறேன். மலை உச்சியில் குகை போல இருக்கும் ஒரு இடத்தில் நீர் சுனை உண்டு. அவ்விடத்தில் பருந்துப் பார்வை பார்த்தபடி உட்கார்ந்தோ, படுத்தோ விட்டால் கண்கள் தானாக மூடிக்கொண்டு விடும். அப்படி ஒரு எகாந்தம், இனிமை, தனிமை.
ஆனால் அப்பொழுது சமண மதத்தை பற்றியோ, அவர்கள் வழிபாடு, வரலாறு, வாழ்வியல் முறைகளைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. ஆதலால் கால் போன போக்கில் மலையை சுற்றுவதோடு சரி. சைவ, வைணவ மதத்தைப் போல சமண மதமும் அரசர்கள் காலத்தில், தமிழகம், இந்தியா முழுவதும் மிகுந்த செல்வாக்கோடு இருந்திருக்கிறது. இப்போழுது இருக்கும் ஜெயின் மதத்தவர்களே அப்போழுது சமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். சமணத் துறவிகள் பெரும்பாலும் வாழ்ந்த மலைக் குன்றுகளில் கோயில்கள், சிற்பங்கள், ஒவியங்கள் இப்படிப் பலவற்றை உருவாக்கினர். அப்படி வாழ்ந்த பகுதிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளன. மற்ற இடங்களை பற்றி அவ்வளவாக தெரியாவிட்டாலும், மதுரையை சுற்றி பல இடங்களில் வாழ்ந்ததற்கான தகவலை எஸ். ராமகிருஷ்னன் எழுதிய 'தேசாந்திரி' என்னும் நூலில் இருந்து தெரிந்து கொன்டேன்.
அவை மதுரையை சுற்றியிருக்கும் மேலக்குயில்குடி, நாகமலை (மதுரை காமராஜர் பழ்கலைக்கழகம் செல்லும் வழியில்), திருப்பரங்குன்றம் பின்புறத்தில், ஆனைமலை (மதுரைக்கும் மேலூருக்கும் நடுவில் வரும் ஒரு மலை), மற்றும் கீழவளவு மலையில். இதில் எல்லா மலைகளிலும் விளையாட்டாக ஏறி இறங்கி விட்டாலும் அதிகம் சுற்றித் திரிந்தது திருப்பரங்குன்றத்தில் தான். கல்லூரியில் என்னோடு படித்த திருநகர், பசுமலை, பைக்காரா நண்பர்களோடு திருப்பரங்குன்றம் மலைகளில் பொழுதை போக்க பலமுறை சுற்றித் திரிந்திருக்கிறேன். மலையின் முன்புறம் உள்ள திருப்பரங்குன்றம் எப்படி எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படுமோ, அதற்கு நேர்மாரனது மலையின் பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதி. யாருமற்ற அமைதிப் பிரதேசம். மலையின் பின்புறம் உள்ள குடைவறைக் கோயில்கள், கல் சிற்பங்களை கண்டிருக்கிறேன்.




யானைமலை - நரசிங்க பெருமாள் கோயில்



யானைமலை



திருப்பரங்குன்றம் மலையின் பின்புறம். மலையின் மேலே உள்ளது காசி விஸ்வநாதர் கோயிலும், தர்காவும்



திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரம், பின்புறத்தில்




ஆனால் அப்பொழுது இதெல்லாம் சமணர்கள் காலத்தில் உருவாக்கியது என்ற விவரம் தெரியாது. அங்கிருக்கும் குடும்ப சகிதமான குரங்குகளோடு விளையாடவும், மலையை ஒட்டி உள்ள சரவணப் பொய்கையில் டைவ் அடித்து குளிக்கவும், யாருமற்ற தனிமையில் நண்பர்களோடு பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை உள்ளிழுக்கவும் மட்டுமே அந்த இடம் எனக்கு பழக்கப்பட்டிருக்கிறது.

அதைப் போலத்தான் பல்கலைக்கழகத்திற்க்கு எதிரில் இருக்கும் மலையும். மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் எதிரில் இருக்கும் ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளியில் +1, +2 படிக்கும் காலத்தில் ஐந்து...ஆறு நண்பர்களுடன் க்ளாசை கட் அடித்து விடு வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி எதிரில் இருக்கும் நண்பனின் வீட்டுக்கு சென்று விடுவோம். நண்பனின் அம்மா, அப்பா எல்லோரும் வேலைக்கு சென்று விடுவதால், எதிர் வீட்டில் இருக்கும் சாவியை வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைவோம். வீட்டிலிருந்து சிறிது தூரம் பின்னோக்கி நடந்து சென்றால் வந்து விடும் மலை. அப்பொழுதே மலையின் ஒரு பகுதியில் கல்குவாரிகள் இருந்ததுண்டு. அடிவாரத்தில் இருந்த அந்த கல்குவாரியின் பல அடி உயர பள்ளத்தில் தண்ணிர் தேங்கி இருக்கும். பல அடி உயர மலை முகட்டில் மேலேறி அங்கிருந்து தண்ணிரில் டைவ் அடித்து முழ்கும் அந்தப் பகுதி சிறுவர்களுடன் நாங்களும் சிறிது நேரம் குளிப்பதுண்டு. பின்னர் அந்த மலை இடுக்குகளில் இருந்து வழியும் தண்ணிரில் மிதந்து வரும் மீன் குஞ்சுகளை பிடித்து அருகிலேயே தீயை மூட்டி சுட்டு கையோடு நண்பனின் வீட்டில் இருந்து கொண்டு சென்ற உப்பு, மிளகாய் பொடியை தூவி சாப்பிடுவதுண்டு.பின்னர் மதியத்திற்கு மேல் மலையேற்றம். மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது தூரத்தில் மதுரை நகரம் முழுவதும் தெரியும். கீழே மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் மீட்டர் கேஜ் ரயில். பசுமை போர்த்திய புல்வெலிகள். மலையில் நீண்ட குகை போன்று ஒன்றிரண்டு உண்டு. ஆனால் பயத்தில் நாங்கள் உள்ளே யாரும் செல்வதில்லை. முன்னே இருக்கும் ஒன்றிரண்டு சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கல்லை மட்டும் தடவிப் பார்த்து ' இந்த மலையில எவன்டா வேல வேட்டி இல்லாம இதெல்லாம் செதுக்கி வச்சுருக்கிறது' என்றபடியே அந்தப் பகுதியை கடந்து செல்வதுண்டு. உண்மையில் அது ஒரு கனாக்காலம் எனக்கு.
கீழவளவை சுற்றி ஏராளமான கல்குவாரிகள் உண்டு. தரையை மட்டுமே தோண்டும் இவர்கள் மலையில் கை வைக்க மாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன். ஒரு வருடங்களுக்கு பிறகு மதுரை சென்றிருந்தபோது அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவிற்க்காக அந்தப் பகுதியில் இருந்த ஒரு கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. மலை இருந்த இடத்தை பார்த்த போது மலையில் பாதி இல்லை.







ப்ரட் துண்டுகளை போல மலை பாதியாக வெட்டியெடுக்கப்பட்டிருந்தது. கண்டிப்பாய் மறுமுறை செல்லும்போது நான் ஓடி ஆடித் திரிந்த அந்த மலை இருக்காது. இன்னும் ஆறு மாதங்களிலேயோ, இல்லை ஒரு வருடத்திலோ அந்த இடத்தில் மலை என்ற ஒன்று இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஆகிவிடும். அந்தப் பகுதி மக்களுக்கும் அந்த மலையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
நித்தம் பலமுறை கேட்கும் வெடிச்சத்தமும், வெடிமருந்துகளால் அந்தப் பகுதி கண்மாய், ஊரணி போன்றவை விஷத்தன்மை ஆனது தான் மிச்சம். அருகில் வசிக்கும் கிராம மக்கள், கல்குவாரிகள், அனுமதி கொடுத்த அரசாங்கம், இதில் யாரைக் குற்றம் சொல்ல. இங்கே சிதைக்கப்படுவது இது பொன்ற சிறிய மலைகள் மட்டும் அல்ல...என்னைப் போன்றவர்களின் சிறு வயது நினைவுகழும் தான். பணத்திற்க்காக சக குடும்பத்தவர்களையே கொல்லும் இவ்வுலகில் மலை என்ன சாதரணம், இல்லையா !
இதைப் போலவே நாகமலை, புதுக்கோட்டை அருகில் இருக்கும் அஜந்தா, எல்லோரா குகை ஒவியங்களைப் போல புகழ் பெற்ற சித்தன்ன வாசல் மலையும் ஒவியங்களும் கல் குவாரி முதலாளிகளால் சிதைக்கபட்டு சுக்கு நூறாக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் தேசாந்திரி நூலில் சொன்னது போல காலத்தில் மீதமிருக்கும் இது போன்ற சில இடங்கள் தான் சரித்திரம் உண்மையென மெய்ப்பித்துக் கொண்டு இருக்கின்றன. காலம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இது போன்ற மலைகளை காப்பாற்றி வைத்திருக்கும் தெரியவில்லை. ஒரு கல் சிலையாகும் போது, அது மனிதனின் கலைநுட்பத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், அதே சிலை உடைக்கப்பட்டுத் திரும்பவும் கல் ஆகும் போது, அது தனிமனிதனின் வீழ்ச்சியை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் வீழ்ச்சியைக் குறிப்பதாகவே அமையும் என்று சொன்னது  எவ்வளவு பெரிய உண்மை.